வேலை முதல் நாள் அனுபவம்

மதிய சாப்பாட்டை உண்ட களைப்பில் விறாந்தையில் சாய்ந்து கிடந்தபடி அம்மாவுடன் ஊர்க்கதை கதைத்துக் கொண்டிருந்தபோது என் அலைபேசி அலர ஆரம்பித்தது. யார் இந்த நேரத்தில் என்ற இயல்பான சலிப்போடு எழும்பிப்போய் அலைபேசியை எடுத்து காதில் வைத்தேன். ஆடி போய் ஆவணி வந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று பழசுகள் கூறுவதுபோல் ஆவணி மாதம்தொடக்கம் வேலை என்று இனிமையான செய்திகேட்டு திண்ட களைப்பு நிங்கி சந்தோசத்தில் திண்டாடினேன். நூலக நிறுவனத்தில் ஆவணிமாதம் முதலாம் திகதி தொடக்கம் எனக்கு வேலை என்று தொலைபேசியில் உறுதிசெய்யப்பட்டது. வீட்டில் அனைவருக்கும் துள்ளித்துள்ளிச் சொல்லித்திரிந்தேன்.

ஆவணி முதலாம் திகதி அதிகாலை 5 மணிக்கே எழும்பி அவசர அவசரமாய் ஆயத்தமானேன். நாற்காலியில் உட்கார்ந்து உணவு உண்ண முடியாமல் வாசலில் நின்றபடியே சாட்டுக்கு சாப்பிட்டுவிட்டு பேருந்து தரிப்பிடம் நோக்கி பரபரவென நடந்தேன். எனக்காகவே காத்திருந்த பேருந்துபோல் சற்றும் பிந்தாமல் உடனே வந்தது யாழ்ப்பாணம் நோக்கிச்செல்லும் பேருந்து. அத்தனை வேகமாய் வரும் பேருந்தை என் ஒற்றைக் கட்டைவிரலால் நிறுத்திவிட்டேன் என்று மனதிற்குள் மார்தட்டிக்கொண்டு லாவகமாய் தொற்றிக்கொள்ள பேருந்து நகர்ந்தது. யாழ்ப்பாணம் வந்திறங்கி தெல்லிப்பளை பேருந்தை தேடி ஓடி ஏறினேன். அதுவும் என்னவோ எனக்காகவே காத்திருந்ததுபோல் நான் ஏறியதும் நகர ஆரம்பித்தது. கொக்குவில் சந்தியை தவற விட்டாலும் என்ன அச்சத்தில் தொட்டிலில் தூங்கும் குழந்தையை எட்டி எட்டிப் பார்ப்பதுபோல் அடிக்கடி ஜன்னல்வழியாக பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒருவழியாக கொக்குவில் சந்தியில் என்னை இறக்கி விட்டது சிறிய பேருந்து. எனக்கோ எந்தப்பக்கத்தால் செல்வதென்று தெரியாமல் அதை வெளிக்காட்டவும் முடியாமல் யாரையாவது கேட்கலாம் என்று மெதுவாய் நடந்தேன். ஆண்கள் இடம் விசாரிப்பது வெகு இலகு. ஆனால் பெண்கள் இடம் விசாரிப்பதே பெரும் போராட்டம் என்பது என்னைப்போன்று வீதியில் இடம்விசாரித்த பெண்களுக்கே தெரியும். ஒருவழியாக வயது நிரம்பிய ஓர் அம்மாவை கண்டு ஆடியபாதம் வீதியை விசாரித்தேன். அந்த அம்மாவின் வழிகாட்டலின்படி ஆலமரத்திற்கு முன்னால் இருக்கும் வீதியால் குடுகுடுவென நடந்தேன். ஒருவழியாக என்னெதிரே தெரிந்தது நான் பணிபுரியப்போகும் அலுவலகம். அதிகாலை 5 மணியிலிருந்து வேக வேகமாக அவசரப்பட்ட எனக்கு என்னையுமறியாமல் பதற்றம் பற்றிக்கொண்டது. கால்கள் நடக்க மறுத்தன. தயக்கம், பதற்றம், எதிர்பார்ப்பு, நடுக்கம் என்று ஏகப்பட்ட குணாதிசயங்கள் ஒரேநேரத்தில் என்னுள் வந்தது. ஒருவாறு உள்ளே சென்று என்னை அறிமுகப்படுத்தி ஓரிரு நிமிடங்களிலேயே இதயத்துடிப்பின் படபடப்பு குறைந்து விட்டது. அதற்குக் காரணம் அங்குள்ளவர்கள் என்னுடன் நெருங்கிய விதம். ஒட்டுமொத்த பேருமே என் நெஞ்சை தொடும் விதத்தில் அன்பாக பழகினார்கள். பூரித்துப்போய் விட்டேன். முதல் நாளிலே அனைவருடனும் மிக நன்றாக பழக முடிந்தது. அருமையாக சக பணியாளர்கள் மற்றும் கனிவான நிர்வாகிகள் என அனைத்துமே அம்சமாக இருந்தன.

நான் வேலைக்குச் சென்ற முதல் நாள் அனுபவத்தைப் போல் நான் பணிபுரியும் இடம் நான் செய்யும் வேலை பற்றிக் குறிப்பிட்டேயாக வேண்டும். ஒருவகையில் எனக்கு இந்த இடத்தில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்திற்கு நான் பெருமைப்பட வேண்டும். காரணம் இது மற்றவர்கள் பார்வையில் வெறும் வேலையாக தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் செய்வது நாளைய சந்ததியினை வளர்ப்பதற்கு நிரத்தர வித்திடுகின்ற சரித்திரப்பயன் வாய்ந்ததொரு விடயம்.

1981 ஆம் ஆண்டு ஆனி மாதம் முதலாம் திகதி நள்ளிரவு தென்கிழக்காசியாவின் சிறந்த நூலகமென போற்றப்பட்ட சுமார் 97,000 புத்தகங்களுடன் திகழ்ந்த அரிய பொக்கிசமான யாழ்ப்பாண நூலகம் அறிவற்றவர்களின் அக்கிரமச்செயலால் எரிந்துகொண்டிருந்தது. ஒரு அடையாள அழிப்பின் ஆறாத வடுவாகியது இச்சம்பவம் எமக்கு மட்டுமன்றி உலகிற்கும். ஒருதடவை இழந்ததுபோல் இன்னோர்தடவை இழக்க விட மாட்டோம் என்று உறுதியை உதிரமாக உடம்பில் ஓடவிட்டு அத்தனை நூல்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி வைத்து நூல்களையும் எழுத்தாவணங்களையும் அழிவிலிருந்து காப்பதும், ஆவணப்படுத்துவதும், அடுத்த தலைமுறையினருக்கு கிடைக்கக்கூடியதாக பேணுவதும் என்று இலாபநோக்கற்ற தன்னார்வ கூட்டுழைப்பாய் இயங்கிக்கொண்டிருக்கின்றது நூலக நிறுவனம். அத்தகு நிறுவனத்தின் வேலை செய்வது தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டு யாழ் மண்ணை தாய் மண்ணாய்க் கொண்டு பிறந்த எனக்கு பெருமையே.

Comments

Popular posts from this blog

01.10.2018 To 22.10.2018

Post -30

Post - 27