நூலக நிறுவனம் - ஓர் அறிமுகம்

நூலகம் திட்டம் என்பது ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்தாவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி வைப்பதற்கான இலாப நோக்கற்ற ஒரு தன்னார்வக் கூட்டுழைப்பாகும்.
பொருளடக்கம்
    •    1 நோக்கங்கள்
    •    2 திட்டச் செயற்பாடுகள்
  •     2.1 நூலகம் குழு
  •     2.2 நூற் தெரிவு
  •     2.3 பதிப்புரிமை
    •    3 திட்ட வரலாறு
  •    3.1 முதல் முயற்சிகள்
  •    3.2 நூலகம் திட்டம்
    •    4 இவற்றையும் பார்க்கவும்
    •    5 வெளி இணைப்புக்கள்

நோக்கங்கள்

    •    ஈழத்து நூல்களையும் எழுத்தாவணங்களையும் அழிவிலிருந்து காப்பதும், ஆவணப்படுத்துவதும், அடுத்ததடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கக்கூடியதாகப் பேணுதலும்.
    •    ஈழத்து நூல்களை இலகுவாக , இலவசமாக இணையத்திற் படிக்க, உசாத்துணைப் பாவனைக்குப் பயன்படுத்தத் தக்கதாக கிடைக்கச்செய்தல்
    •    ஆய்வு நோக்கங்களுக்காக இணைய தேடுபொறிகளில் தேடல்கள் நிகழ்த்துவோர், தமிழ் தேடல்கள் மூலம் ஈழத்து நூல்களைக் கண்டடைய, அந்நூல்களின் உள்ளடக்கத்தைப் பெற்றுக்கொள்ள வழி செய்தல்.

திட்டச் செயற்பாடுகள்

நூலகம் குழு

இத்திட்டத்தின் செயற்பாடுகள் திறந்த நிலையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் அங்கத்துவர்கள் யாவரும் மடலாடற் குழு ஒன்றில் இணைந்துள்ளனர். முக்கிய முடிவெடுப்புக்கள், விவாதங்கள் அக்குழுவிலே நிகழ்த்தப்படுகின்றன. பொறுப்புக்கள் ஆர்வத்துக்கு ஏற்பவே பகிர்ந்தளிக்கபட்டுள்ளன. இணையப் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு வழங்கி தொடர்பான கட்டுப்பாடுகள் வலைத்தள நிர்வாகியாக பொறுப்பேற்றுக்கொண்ட சில உறுப்பினர்களிடமே உள்ளன.
நூற் தெரிவு
ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களில் கிடைத்தற்கரியனவற்றுக்கும் குறிப்பிடத் தக்கனவற்றுக்கும் முன்னுரிமை அளித்தே மின்னூலாக்குவதற்கான புத்தகங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. ஆயினும் இத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்ய விரும்புவோர் தாம் விரும்பும் எந்த நூலையும் மின்னூலாக்கலாம். நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதே முக்கியமானது. மேலும் சமகால எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதற்கு குறித்த நூலாசிரியரின் அனுமதி பெறப்பட வேண்டும்.

பதிப்புரிமை

இத்திட்டம் ஈழத்து நூல்களை இலவசமாக இணையத்தில் வழங்குவதால் பதிப்புரிமை தொடர்பான சிக்கல்கள் எழ வாய்ப்புகள் உண்டு என கருதப்படுகிறது. இதனை எதிர்கொள்ளுமுகமாகச் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
    1.    நூல்களைப் படிக்கவும் உசாத்துணை பாவனைக்குப் பயன்படுத்தவும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நூலுக்கான முழு பதிப்புரிமையும் குறித்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே அமையும்.
    2.    சமகால எழுத்தாளர்களின் நூல்களைச் சமர்ப்பிக்க விரும்புவோர் அவ்வெழுத்தாளரின் எழுத்துமூல அனுமதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
    3.    பிற இணையத்தளங்கள் இந்நூல்களை பயன்படுத்துவதற்கு நிபந்தனைகளுக்குட்பட்ட அனுமதிகளே வழங்கப்படுகிறது.
திட்ட வரலாறு

முதல் முயற்சிகள்

இந்த நூலகம் ஆரம்பத்தில் ஈழநூல் என்பதாகத் தான் இருந்தது. மதுரைத் திட்டத்தால் கவரப்பட்டு ஈழத்து நூல்களுக்கான தனியான செயற்றிட்டம் தேவை என்ற எண்ணத்துடன் ஈழநூல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது ஈழநூலாக திருக்கோணமலையின் வரலாறு 28. சூலை 2004 இல் சூரியன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. [1] 2004 டிசம்பரில் noolaham.org என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டது 

நூலகம் திட்டம்

2005 தையில் நூலகம் திட்டம் தி. கோபிநாத், மு. மயூரன் ஆகியோரால் வலையேற்றப்பட்டது. 2005 நடுப்பகுதியில் வழங்கி செயலிழந்தமையால் தற்காலிகமாக திட்டம் இடைநிறுத்தப்பட்டது. 2006 தைப்பொங்கலன்று நூலகம் திட்டம் நூறு மின்னூல்களுடன் இணையத்திற் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

01.10.2018 To 22.10.2018

Post -30

Post - 27